“கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வந்துர்றோம், சார்”
என்றபடி சில மாணவர்கள் முன்னால் வந்து நின்றனர்.
“சீக்கிரம் வாங்க” என்றார் ஆசிரியர்.
வந்து அமர்ந்தபின்னர், ஏதோ வாக்குவாதம் நடப்பது போலிருந்தது.
“என்ன ஆச்சு” “தண்ணி கொண்டு வரச் சொன்னேன்...
கொண்டு வரல சார்..
நேத்துலாம் நான் எல்லாருக்கும் கொண்டு வந்தேன்..” “சரி.. சரி...
தண்ணி கொடுக்காததுனால பெரிய கலகமே வந்துச்சு தெரியுமா..”
“என்ன சார்...
அப்புடியா.. இந்தியாவுலயா..??” “ஆமா” “அது ஒரு ஆயுதங்களப் பராமரிக்குற இடம்..
துடைக் குறது.
எண்ணெய் போடுறதுனு அந்தக் கிடங்கு மிகவும் பரபரப்பா இருக்கும்.
அங்க வேலை செய்யுறவங்க கடுமையா உடல் உழைப்பு செய்யுறவங்களா இருந்தாங்க”
“நல்ல சம்பளம் கிடைக்குமா சார்..”
“உடல் உழைப்புக்கு அதிகமா ஊதியம் கொடுக்குற நிலைமை எப்புவும் இல்லயே..”
“நிறைய வேர்வை வரும். தண்ணி குடிச்சுக்கிட்டே இருக்கணுமே சார்..”
“ஆமா...
வியர்வைங்குறது நம்மோட உடல் இயற்கையா வெப்பத்தை வெளியேத்துறதுதான்..
வியர்வை சுரப்பிகள் தண்ணிய வெளியேத்துது..
அதனால மறுபடியும் தண்ணி தேவைப்படுது..”
“நீங்க சொல்ற அந்தக் கிடங்குல தண்ணிக்குப் பஞ்சம் இருந்துச்சா..”
“அப்புடி எதுவும் பஞ்சமில்ல.. அன்னிக்கு கடுமையான சூடு. வியர்வைல குளிச்சிருந்தவரு அந்த வழியாப் போன ஒரு படை வீரர்கிட்ட கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்னு கேட்ருக்காரு.”
அந்த வீரர் அதற்குப் பதில்
எதுவும் சொல்லவில்லை. இவர் மறுபடியும் கேட்டிருக்கிறார்.
“தண்ணி கொடுங்களேன்” என்று. அந்தப் படைவீரரோ முகத்தில் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியவாறு “முடியாது” என்று மறுத்தார்.
“தண்ணிதானே கேட்கிறேன்” என்று அவர் முடிப்பதற்குள், படை வீரர் சீறினார்.
“நான் உயர்ந்த சாதி.. நீயோ கீழ்சாதியில் பிறந்தவன்..
உனக்கு நான் தண்ணீர் எடுத்துத் தர முடியாது” என்றார். சமூகத்தின் கொடூரத்தை உணராதவராக தண்ணீர் கேட்டவர் இல்லை.
இருந்தாலும் அவர் விடவில்லை. “எப்புடி உயர்ந்த சாதினு சொல்லிக்குறீங்க..?”
“பிறந்ததே உயர்ந்த சாதிக்குடும்பத்துலதான்..” “ஓ..
அதனால் மட்டும் ஆகிற முடியுமா..
நம்ம ரெண்டு பேரும் ஒரே இடத்துலதான வேலை பாக்குறோம். ஒரே சம்பளம்தான வாங்குறோம்..”
“அதுக்காக நாம சமமாகிற முடியுமா..
சாதிக் கட்டுப்பாடுகள் இருக்கு...
எங்களுக்குன பழக்க வழக்கங்கள் இருக்கே.” “அப்புடி எதை நீ கடைப்பிடிக்குற?” “மாமிசம் சாப்பிட மாட்டேன்..
அப்புறம்..” என்று தொடர்வதற்குள் இடைமறித்தார்.
“நீ வீரன்தானே.. துப்பாக்கிக்குள் குண்டை நீதானே சொருகுற.. உறையக் கடிச்சுக் கிழிச்சுதான குண்ட வெளில எடுக்குற..??” “ஆமா.” “உறையக் கடிச்சுக் கிழிக்குறது எப்புடி அவ்வளவு எளிதா இருக்கு.??” “அதுல எண்ணெய் தடவியிருக்கு..
அதனால நாம கடிச்சு எடுக்குறதுக்கு வசதியா இருக்கு...
இந்தக் கிடங்குல நீங்கதான எண்ணெய்லாம் தடவி வெக்குறீங்க...
உங்களுக்குத் தெரியாதா..?” “என்ன தடவுறோம்னு எங்களுக்குத் தெரியும்...
அதனாலதான் கேட்டேன்..” “ஏன்.. அது எண்ணெய் இல்லையா?.. “நாங்க தடவி வெக்குறது..
மாட்டுக் கொழுப்பு அல்லது பன்னிக்கொழுப்பு..” அதிர்ந்து போனார் அவர்.
“மிருகக் கொழுப்ப தினமும் கடிக்குற நீ எப்புடி உயர்சாதினு சொல்லிக்குற..”
இதைக் கேட்டவுடன் முகம் சிவந்தது. உடல் முழுவதும் வியர்வை வெளிப்பட்டது.
அவருக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. பக்கத்தில் இருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடித்த அவர் அப்போதும் கிடங்கு வீரருக்குத் தரவில்லை.
அவருடைய பெயர் மங்கள் பாண்டே. அப்போது அங்கு வந்த மற்றொரு வீரர், “பாண்டே ஏன் அப்புடிக் கோபத்தோட போறாரு..”
“நம்மகிட்ட காட்டுற கோபத்த அங்க போய்க் காட்டட் டும். கோபம் வரட்டும்னுதான் நானும் அப்புடிப் பேசுனேன். கலகம் பொறந்தா வழி கிடைக்கலாம்ல” என்றார்.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்து கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவர்கள், “அப்போ கலகத்தப் பத்த வெச்சவரு இவர்தானா..
பேரு என்ன சார்..?” “மாதாதீன் பாங்கி”